இலங்கை சுங்கத்தின் பாரிய மோசடி - நண்பரை பாதுகாக்கிறாரா ஜனாதிபதி?
"இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மற்றுமொரு பெருவாரியான மோசடி இதுவாகும். சுங்கத் திணைக்களத்திற்குள் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய 123 கொள்கலன்களுக்குப் (Containers) புறம்பாகவே இந்த மோசடி இடம்பெற்றுள்ளது" எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நேற்று (19) நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.இது தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி தெளிவான அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்திய அவர், குறித்த விசாரணை அறிக்கையை அரசாங்கம் மறைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க"40 அடி நீளமுடைய கொள்கலன் ஒன்றில் வாகனங்களின் உதிரிப் பாகங்கள், இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுவாக இவ்வாறு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் போது சுங்கத்தின் 3 நடைமுறைகள் பின்பற்றப்படும். இந்த கொள்கலன் 'சிவப்பு பாதைக்கு' (Red Channel) உட்படுத்தப்பட்டதால், இதனை நேரில் பரிசோதிப்பதுடன் இயந்திரங்கள் மூலமாகவும் சோதனையிட வேண்டும்.இதன்படி, சுங்கப் பணிப்பாளர் நாயகம் அருக்கொடவின் அறிவுறுத்தலின் பேரில் சுங்கத்தின் முதலாவது குழுவொன்று பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பிரதிச் சுங்கப் பணிப்பாளராக இருந்த என்.எஸ். குமாநாயக்க (தற்போது ஜனாதிபதியின் செயலாளர்) தலைமையில் இரண்டாவது குழு அனுப்பப்பட்டது. இதில் சோதனையிட்ட அதிகாரிகள், 'எந்தப் பிரச்சினையும் இல்லை, இதில் 7 இருக்கைகள் (Seats) மட்டுமே அதிகமாக உள்ளன' எனக்கூறி, அந்த 7 இருக்கைகளையும் அரசுடைமையாக்கினர்.எனினும், அங்கு மேலும் பல முறைகேடுகள் இருப்பதாக சுங்கத் பணிப்பாளர் நாயகத்துக்கு மீண்டும் முறைப்பாடு கிடைத்தது.அதன் பின்னர், இந்த விவகாரம் சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த கொள்கலனில் 85 வகையான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் சுங்க ஆவணப் பதிவேட்டில் 45 வகையான பொருட்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த 45 வகைகளுக்குள் அடங்கும் 355 அலகுகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.அத்துடன், ஆவணங்களில் அறிவிக்கப்பட்ட 15 வகையான பொருட்களுக்குள் மேலும் 254 அலகுகள் அதிகமாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, குறைந்த வரி விதிக்கப்படும் 7 வகையான பொருட்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவை கொள்கலனில் இருக்கவில்லை.மேலும் 23 வகையான பொருட்களின் 474 அலகுகள் காணாமல் போயுள்ளன. இதில் இறக்குமதி அனுமதிப்பத்திரம் இல்லாத 122 வாகன இருக்கைகளும், ரிம்களுடன் கூடிய 18 சில்லுகளும் அடங்குகின்றன.இறுதியில், இந்த விசாரணை அறிக்கை 2026/01/19 ஆம் திகதி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும், இந்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தனக்கு நெருக்கமான அதிகாரி ஒருவரைப் பாதுகாப்பதற்காக இந்த விசாரணை அறிக்கை மறைக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஏன் இந்த அறிக்கையை மறைத்தார்? தனது நண்பரைப் பாதுகாப்பது ஏன்? இது குறித்து ஜனாதிபதி நாட்டுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்" என டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
