Entertainment18 August 2026

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார்.

'பைசன்' படத் தயாரிப்பின் போது, உடன் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து துருவ் விக்ரம் பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, தான் கடந்த காலத்தில் ஒருவரிடம் சந்தித்த மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசியிருந்தார்.

அதில் அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடாத போதிலும், சமூக வலைதளங்களில் துருவ் விக்ரம் குறித்தே பல்வேறு ஊகங்களும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், 'இந்தியா டுடே' (India Today) வட்டமேசை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய துருவ் விக்ரம், இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்துத் தெரிவித்துள்ளார்.

"சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் இந்த அதிகப்படியான கவனம் என்னைப் பாதிக்கவே இல்லை என்று கூறினால் அது உண்மையல்ல. ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் யார்த்தத்துடன் இணைந்திருப்பதும், நமது உண்மையான அடையாளம் மற்றும் மதிப்பீடுகளைப் புரிந்துகொண்டிருப்பதும் மிக முக்கியம்.

நாம் நேசிக்கும் மனிதர்களையும், நமது வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கும் விஷயங்களையும் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்மையின் பக்கம் நின்று, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் போது, வெளியிலிருந்து வரும் விமர்சனங்களும் ஊகங்களும் நம்மைப் பாதிப்பது குறையும்" எனத் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் தனக்கான ஒரு தனி உலகத்தைப் படைத்துக் கொண்டு, "தனி ஒரு படை" போலச் செயல்படப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், பொதுவெளிச் சத்தங்களில் இருந்து விலகித் தன் அமைதியைப் பாதுகாப்பதே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தனது சமூக வலைதளப் பயன்பாடு குறித்துப் பேசிய அவர், திரைப்பட விளம்பர காலங்களைத் தவிர்த்துப் பிற நேரங்களில் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் இருந்து விலகியிருப்பதாகவும், புத்தகங்கள் வாசிப்பது, இசை கேட்பது மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலேயே தான் அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes