General29 April 2026

நாடாளுமன்றத்தின் முழுமையான கணகாய்வு அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிப்பு!

8ஆவது மற்றும் 9ஆவது நாடாளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்த முழுமையான கணக்காய்வு அறிக்கைகளை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சபாநாயகர் ஜகத் விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (29) காலை கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் சில பிரிவுகள் இதற்கு முன்னர் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இம்முறை அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய விரிவான கணக்காய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.

நிதிப் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே எமது நோக்கம்" என அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன மூலம் இந்தத் கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் 10ஆவது நாடாளுமன்றத்திலும் இந்த நடைமுறை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

கணக்காய்வாளர் நாயகம் உறுதியளித்தபடி, அடுத்த மாத இறுதிக்குள் இந்த முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes