General01 May 2026

படிதார் ஆட்டமிழப்பு சர்ச்சை– நடப்பு செம்பியனுக்கு நேர்ந்த கதி!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஹமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 13 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் உட்பட 28 ஓட்டங்களை எடுத்து அதிரடியான தொடக்கத்தை அளித்தார்.

இருப்பினும், ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பில் அபாரமாகச் செயல்பட்டு மொத்தம் ஐந்து ஆட்டமிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததால், ஆர்சிபி அணியால் 155 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க நேரிட்டது.

ஆர்சிபி தரப்பில் தேவ்தத் படிக்கல் 24 பந்துகளில் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

இப்போட்டியில் ரஜத் படிதார் ஆட்டமிழந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; ஹோல்டர் பிடித்த பிடியெடுப்பு தரையில் பட்டதாகக் கருதிய விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஆகியோர் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அணி தலைவர் சுப்மன் கில் 43 ஓட்டங்களை எடுத்து அணியை மீட்டெடுத்தார்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த 'இம்பாக்ட் பிளேயர்' ராகுல் திவேத்தியா 17 பந்துகளில் 27* ஓட்டங்களை விளாசி 4 பந்துகள் மீதமிருக்க குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அந்த அணியால் வெற்றியைத் தடுக்க முடியாமல் போனது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ய, நடப்பு செம்பியனான ஆர்சிபி அணி இந்தத் தொடரில் தனது மூன்றாவது தோல்வியைத் தழுவியது.
Related recommendation
Hiru TV News | Programmes