International01 May 2026

“சார்... அவன் தூங்கிட்டான் சார்!” - துருக்கியில் காணாமல் போன குழந்தையை மீட்க நடந்த 10 மணி நேர தேடுதல் படலம்!

துருக்கியில் காணாமல் போன 2 வயதுக் குழந்தை, சுமார் 10 மணி நேரத் தீவிரத் தேடுதலுக்குப் பின்னர் மலைப்பகுதியில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் சரியாககாயி (Sariyagakayi) கிராமத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் கிராமத்தினர் உடனடியாகத் தேடுதல் பணியில் இறங்கினர்.

நேரம் செல்லச் செல்ல கவலையடைந்த மக்கள், குழுக்களாகப் பிரிந்து கிராமத்தைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் குழந்தையைத் தேடினர்.

சுமார் 10 மணி நேரமாகத் தொடர்ந்த இந்தப் போராட்டத்தின் இறுதியில், கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் குழந்தையை மக்கள் கண்டுபிடித்தனர்.

குழந்தையைக் கண்டுபிடித்த போது, தன்னைத் தேடி ஒரு கிராமமே திரண்டு வந்திருப்பதைச் சிறிதும் அறியாத அந்தக் குழந்தை, எவ்விதக் கவலையுமின்றித் தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது. "சார்... அவன் தூங்கிட்டான் சார்!" என்ற நகைச்சுவையான பின்னணியுடன் கூடிய இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

ஊரே திரண்டு கவலையுடன் தேடிக் கொண்டிருந்த நிலையில், மழலை மாறாத புன்னகையுடன் குழந்தை தூங்கிக் கொண்டிருந்த காட்சி பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. தற்போது மீட்கப்பட்ட குழந்தை நலமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes