General01 May 2026

வெலிமடை சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் சிறுவர்கள் மீது தாக்குதல்: வெளியாக தகவல்

வெலிமடை பகுதியில் உள்ள சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை காவல்துறையினர் இதனை எமது சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

வெலிமடை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நன்னடத்தை மையம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது, அங்கிருந்த ஊழியர்கள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

பின்னர், 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை வெலிமடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes