General01 May 2026

வடக்கு மற்றும் கிழக்கில் மே தினப் பேரணிகளை முன்னெடுத்தது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு பிரதான பேரணிகளை நடத்தியது.

வடக்கு மாகாணம் மேதினக்கூட்டம் முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் இந்தப் பேரணி இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்காக மேதினக்கூட்டம் மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

பட்டிப்பளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், புதிய அரசியலமைப்பு கட்டமைப்பின் ஊடாக நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலப்பகுதிகளில் சுயமாக ஆளும் உரிமையைப் பெறுவதன் மூலமே விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளில் நிலவும் நீண்டகால வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விசேட மே தின நிகழ்வுகளில் கட்சியின் உத்தியோகபூர்வப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அதில் பத்து முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

பொருளாதார நெருக்கடி, டிட்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு மோதல்களால் வீழ்ச்சியடைந்துள்ள ரூபாயின் மதிப்பைக் கருத்திற்கொண்டு தினசரி ஊதியம் பெறுபவர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலினால் ஏற்பட்ட மேலதிக செலவுகளை நுகர்வோரிடமிருந்து வசூலிக்காமல், அதற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அறவிட வேண்டும்.

புதிய அரசாங்கத்திற்குள் இடம்பெறும் ஊழல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள நீதி பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இராணுவம், தொல்பொருள் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபையினால் வசப்படுத்தப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்.
Related recommendation
Hiru TV News | Programmes