International04 June 2026

ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது அரசியல் வருகைக்கு முன்னர் கடைசியாக நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக, சைபர் கிரைம் காவல்துறையினரால் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், மமிதா பைஜூ மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவிருந்த இந்த திரைப்படம், தணிக்கைக்குழுவின் முட்டுக்கட்டைகள் காரணமாகத் தற்காலிகமாக முடங்கியது.

இந்த நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் முழுமையாகக் கசிந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் கசிந்தமை தொடர்பாகச் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது, திரைப்படத்தின் படத்தொகுப்புக் குழுவில் இருந்த ஒருவராலேயே படம் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களது பிணை மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவரும் சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes