International05 June 2026

"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"

போரை முடிவுக்குக் கொண்டு வர புட்டினுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார் ஸெலென்ஸ்கி
யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு புதிய முயற்சியாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதம் ஒன்றில் யுக்ரைன் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் இடம்பெற்று வரும் இந்தப் போர் மீண்டும் அமெரிக்காவின் கவனத்திற்கு வரும் வரை காத்திருப்பது தவறு" எனக் குறிப்பிட்டுள்ள அவர், யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான "நேரடித் தொடர்புகளின் மூலம்" மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலப்பகுதியில் முழுமையான போர்நிறுத்தம் ஒன்றையும் அவர் கோரியுள்ளார்.

எனினும் இத்தகைய போர்நிறுத்தக் கோரிக்கையை புட்டின் நேற்று வியாழக்கிழமை நிராகரித்திருந்தார்.

இதேவேளை, இரண்டு தலைவர்களும் சந்தித்துப் பேசினால் "அது மிகச் சிறந்ததாக இருக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் யுக்ரைன் ஜனாதிபதியின் கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதை கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது குறித்து புட்டினுக்கு விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் பேசிய புட்டின், இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கு முன்பாகவே, "யுக்ரைனுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு தான் நிச்சயமாகத் தயாராகவும் விருப்பத்துடனும் இருப்பதாக" தெரிவித்தார். எனினும், அதற்கு சில சமரசங்கள் செய்துகொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் 1,800-க்கும் அதிகமான வார்த்தைகளைக் கொண்ட தமது நீண்ட கடிதத்தில் ஸெலென்ஸ்கி தமது விடயங்களை பகிர்ந்துள்ளார்.

"உங்கள் போர் எங்கள் நாட்டிற்கு கொண்டு வந்த அழிவுகளுக்குப் பிறகு, ரஷ்ய வீரர்களின் விதியைப் பற்றி நாங்கள் யுக்ரைனில் கவலைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. ஆனால் எனக்கு யுக்ரைன் மக்கள் மீது அக்கறை உள்ளது. நாங்கள் எங்கள் மக்களை இழந்து வருகிறோம், ஒவ்வொரு இழப்பும் நமக்கு வேதனையானது."

யுக்ரைனின் ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள், எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு மற்றும் போர்ச் சூழல் ஆகியவற்றால் ரஷ்ய மக்கள் சோர்வடைந்துள்ளதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

"இந்தப் போரிலிருந்து வெளியேறும் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தயங்க வேண்டாம். இப்போது உங்களிடம் எதிர்பார்க்கப்படும் முக்கிய விஷயம் அதுதான்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா தற்போது "முழுமையாக ஈரான் விவகாரத்தில் கவனம் செலுத்தி வரும்" வேளையில், ஐரோப்பியப் போர் மீண்டும் அதன் கவனத்தின் மையப்புள்ளிக்கு வரும் வரை காத்திருப்பது தவறானது என்றும், சுவிட்சர்லாந்து அல்லது துருக்கி போன்றதொரு நாட்டில் இந்த நேருக்கு நேரான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்றும் யுக்ரைன் ஜனாதிபதி; முன்மொழிந்துள்ளார்.

சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பெரிய அளவிலான பொருளாதார மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே நாளில் தான் யுக்ரைன் ஜனாதிபதியின்; இந்தக் கடிதமும் வெளியாகியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes