International05 June 2026

வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?

துபாய் ஆட்சியாளரின் மருமகனது முன்னாள் மனைவி காணாமல் போயுள்ளதாக பிரிட்டிஷ் மனித உரிமை சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாய் ஆட்சியாளரின் மருமகனும், முன்னாள் கணவருமான ஷேக் சயீத் பின் மக்தூம் அல் மக்தூமுடன் நீண்ட நாட்களாக பிள்ளைகளின் வளர்ப்புரிமை தொடர்பான கடுமையான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜெய்னப் ஜவாத்லி மற்றும் அவரது மூன்று இளம் மகள்களும் திடீரென மாயமாகியுள்ளனர்.

சர்வதேச செய்தி ஒன்று இதனை கூறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் அவர்களுடனான தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் துபாய் காவல்துறையினரால் நள்ளிரவில் பலவந்தமாகக் கடத்தப்பட்டிருக்கலாம் என அவர்களின் பிரித்தானிய மனித உரிமை சட்டத்தரணி டேவிட் ஹேக் குற்றம் சாட்டியுள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களின்படி, துபாயில் உள்ள ஜெய்னப்பின் வீடு தற்போது பூட்டப்பட்டு, வெறுமையாகக் காணப்படுகிறது.
;அஸர்பைஜான் நாட்டின் முன்னாள் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான 34 வயதுடைய ஜெய்னப் ஜவாத்லி, தனது பாதுகாப்பு குறித்து கடந்த பல மாதங்களாகவே தொடர்ச்சியாக அச்சம் வெளியிட்டு வந்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் எந்நேரமும் தனது பிள்ளைகளைப் பலவந்தமாகப் பிரித்துச் செல்லலாம் அல்லது தன்னை இணையவழி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யலாம் என அஞ்சி, அவர் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது வீட்டில் அதிகாரிகள் நுழைந்த போது, அதனை அவர் சமூக ஊடகங்களில் நேரலை செய்திருந்தார்.

"எனது பிள்ளைகளுடன் இருப்பதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான் என்பதை நான் அறிந்திருந்தேன், அதன் பின்னர் அவர்கள் என்னை பிள்ளைகளைப் பார்க்கவே அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் உதவி கோரி நேரலை செய்தேன்" என அவர் தனது சட்டத்தரணியிடம் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அதேநேரம், ஷேக் சயீத் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிடுகையில், ஜெய்னப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும், பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தினார் என்றும் கூறி அவர் ஒரு தகுதியற்ற தாய் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

எனினும், ஜெய்னப் இந்த உத்தியோகபூர்வ குற்றச்சாட்டுகளை நிராகரித்து அவற்றுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பிள்ளைகளின் வளர்ப்புரிமையை தந்தைக்கே வழங்குமாறு துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததுடன், தேவையேற்படின் அதனைப் 'பலவந்தமாக' அமுல்படுத்தலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

இந்தநிலையில் குறித்த உத்தரவை அமுல்படுத்தவே இந்த நள்ளிரவு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தநிலையில், ஜெய்னப்பை நேரில் பார்ப்பதற்காக துபாய் வந்திருந்த அவரது தாயார், வீடு பூட்டப்பட்டு பூட்டுகள் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவர் தற்போது துபாய் காவல்துறை மற்றும் அசர்பைஜான் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.

அத்துடன் அவரது தாயாரும் துபாயை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த செய்தி குறித்து துபாய் அதிகாரப்பூர்வ அமைப்புகளோ அல்லது ஷேக் தரப்போ இது குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
Related recommendation
Hiru TV News | Programmes