General05 June 2026

அரசின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆக உயர்த்த யோசனை கோரல்!

அரசின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% ஆக உயர்த்துவதற்கான நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்கை எட்டும் நோக்கில் பொருத்தமான யோசனைகள், கொள்கை பரிந்துரைகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவ குழுவினால் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவித்தலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த குழுவுக்கு, நாட்டின் அறிஞர்கள், தொழில்முறை நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் இலங்கைப் பிரஜைகள் எவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க முடியும்.

குறிப்பாக, முறைசாரா பொருளாதாரத்தை முறைப்படுத்துதல், வரி அடிப்படையை விரிவுபடுத்துதல், வருவாய் ஈட்டும் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கல், தானாக முன்வந்து வரி செலுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் தரவு பகுப்பாய்வு அடிப்படையிலான வருவாய் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இந்த யோசனைகள் முன்வைக்கப்படலாம்.

இலங்கையின் பொது நிதிக் கொள்கைகள் குறித்து விசேட நிபுணத்துவம் பெற்ற எவராலும் சமர்ப்பிக்கப்படக்கூடிய இந்த யோசனைகள், அதன் சுருக்கம், செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக PDF வடிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்த யோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக 2026 ஜூன் 16 ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வருமான முகாமைத்துவக் குழு தெரிவித்துள்ளது.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes