General08 June 2026

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு 10 புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம்

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேராதனை ரோயல் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாவை மேலும் ஊக்குவிப்பதற்காகவும் 10 புதிய மின்சார வாகனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் ஆன்டன் ஜெயகொடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

முழுமையாக அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பேராதனை பூங்காவிற்குள் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்துத் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பரந்த பூமிப்பரப்பைச் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இலகுவாக சுற்றிப் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த பூங்காவிற்குள், நடமாடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மின்சார வாகன சேவை பெரும் உதவியாக அமையும் என நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஜயவர்தன மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes