General08 June 2026

மேலதிக வரி விதிப்புக்கு மத்தியிலும் குறையாத வாகன இறக்குமதி

நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் வாகன இறக்குமதி மீது மேலதிக வரி (Surcharge) விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்த அளவுக்குக் கணிசமாகக் குறையவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்ந்தும் சந்தைக்குள் வந்தவண்ணமே உள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் பெருமளவிலான வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த போதிலும், இறக்குமதியில் பெரிய வீழ்ச்சி ஏற்படவில்லை என்றும், இதனால் ஏற்பட்டுள்ள சிறிய அளவிலான குறைப்பானது அரசாங்கத்தின் வருமானத்திற்கு எவ்வித நிதி ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுங்கத் திணைக்களத்திற்கு கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் சுமார் 30 சதவீதமான பங்களிப்பு வாகன இறக்குமதி மூலமாகவே கிடைக்கப் பெறுகின்றது என சந்தன புஞ்சிஹேவா விளக்கியுள்ளார்.

கடந்த ஆண்டும் வாகன இறக்குமதியானது சுங்க வருமானத்தில் 30 முதல் 35 சதவீதமான பங்களிப்பைக் கொண்டிருந்ததுடன், அதே போக்கு இந்த ஆண்டும் நீடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட பேச்சாளர், இதன் காரணமாகச் சுங்க வரியின் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இது வருமானக் குறைவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சுங்கத் திணைக்களத்தின் வருவாயை மேலும் அதிகரிக்கச் செய்ய காரணியாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"மேலதிக வரி விதிக்கப்பட்ட போதிலும், முன்னதாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்ற இறக்குமதிக் குறைப்பு எதுவும் பதிவாகவில்லை" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes