General08 June 2026

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு 10 புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம்

இலங்கையின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பேராதனை ரோயல் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாவை மேலும் ஊக்குவிப்பதற்காகவும் 10 புதிய மின்சார வாகனங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் ஆன்டன் ஜெயகொடி தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

முழுமையாக அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பேராதனை பூங்காவிற்குள் நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்துத் தேவையை இந்தத் திட்டம் பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த பரந்த பூமிப்பரப்பைச் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் இலகுவாக சுற்றிப் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த பூங்காவிற்குள், நடமாடுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த மின்சார வாகன சேவை பெரும் உதவியாக அமையும் என நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஜயவர்தன மற்றும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes