International10 June 2026

முறையான அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கணக்கான வானூர்திகளை இயக்கிய கனேடிய விமானி: காவல்துறை அதிரடி விசாரணை!

முன்னணி வானூர்தி நிறுவனம் ஒன்றின் முன்னாள் விமானி, தேவையான தகுதி விபரங்கள் மற்றும் உரிய உரிமங்கள் இன்றி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியுள்ளதாகப் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தைக் கடுமையான மற்றும் 'சிக்கலான மோசடி' ஒன்றாக விவரித்துள்ள காவல்துறை, இது தொடர்பாக 'புராஜெக்ட் இகாரஸ்' (Project Icarus) என்ற பெயரில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த முக்கிய விபரங்களை வெளியிடுவதற்காக இன்று காலை அவசர ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடாவின் தேசிய வானூர்தி நிறுவனமான 'ஏர் கனடா' (Air Canada) அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து விமானிகளும் தங்களின் பறக்கும் திறனை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை கட்டாய மறுபயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும், ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் கனேடிய போக்குவரத்து திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட பரிசோதகர் மூலம் நேரடிப் பறத்தல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes