General10 June 2026

அதிபர் சேவை அதிகாரிகளின் வேதனம் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கை அதிபர் சேவையில் உள்ள அதிகாரிகளின் ஆரம்ப வேதனம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் அனுமதியுடன் இது தொடர்பான புதிய சுற்றறிக்கை (எண் 03/2014 (I)) வெளியிடப்பட்டுள்ளது.

இது முன்னைய 03/2014 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின் முதலாவது பகுதியையும் அதன் உப பிரிவுகளையும் மாற்றியமைத்துள்ளது.

கடந்த மே 11, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி பெறப்பட்டது.

நீண்டகாலமாக அதிபர்களால் முன்வைக்கப்பட்டு வந்த வேதன முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில், அதிபர்களின் சம்பளம் பதவி உயர்வு அடிப்படையில் கணக்கிடப்படும்.

இலங்கை அதிபர் சேவையின் தரம் III-க்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகள், தரம் I வரை பதவி உயர்வு பெறுவதற்குத் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக விசேட சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்களுக்கு 2027 டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை அமைப்பின் விதிகளுக்கு அமையவும், பதவி உயர்வுச் செயல்பாட்டில் அதிபர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கிலும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes