General10 June 2026

மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய் மாற்றியமைப்பு மற்றும் அத்தியாவசியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக, நாளை (11) வியாழக்கிழமை இரவு முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை மாலை 7.00 மணி முதல் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹர பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அல்தெனிய, கோனஹேன, வேபட, சூரியபாலுவ மற்றும் உடுபிட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பரகந்தெனிய, கொஸ்ஸின்ன, எபரளுவ, இம்புல்கொட மற்றும் யாகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்குத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான நீரினைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes