General11 June 2026

"ஜனாதிபதி சர்வதேச உடன்படிக்கைகளை மீறுகிறார்" - மொட்டு கட்சி கடும் குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீறி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

எனினும், தற்போது " சுரேஷ் சலே" நீதிமன்ற உத்தரவின்றி, வெறும் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார.

இந்தத் தடுப்புக் காவலில் சலேவுக்கு கடுமையான சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானமற்ற முறையிலான நடத்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க இது குறித்து மௌனம் காப்பது, அவர் சர்வதேச உடன்படிக்கைகளை மீறுவதாகவே அமையும் என சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சாட்டினார்

இந்தக் கொடூரமான சித்திரவதைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, ஜனாதிபதி முதல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைவரும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

மேலிடத்திலிருந்து வரும் உத்தரவுகளைக் கண்மூடித்தனமாக நிறைவேற்ற வேண்டாம் என அதிகாரிகளை கேட்டுக் கொண்ட மனோஜ் கமகே, அவ்வாறு செய்பவர்கள், ஒரு நாள் பாதிக்கப்பட்ட சலேயை விடவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்தார்

சலேயை தடுத்து வைத்துள்ள பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்தச் சித்திரவதைச் சம்பவங்களுக்கு ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes