International11 June 2026

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக கணக்குகள் தடை : கனடா அரசு அதிரடி நடவடிக்கை!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடைசெய்யக்கூடிய புதிய சட்டமொன்றை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்தின் கீழ், சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்கள் சிறுவர்களுக்குப் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் தளங்களுக்கு மட்டும் விலக்கு வழங்கப்படலாம் என்றும், அதற்கான அளவுகோல்கள்
பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கனடா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கனடாவின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர் (Mark Miller),

"நாம் நமது சிறுவர்களை பாதுகாக்கத் தவறிவிட்டோம். இனியும் அவ்வாறு தொடர முடியாது. அடிப்படை பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ், குழந்தைகளை தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளத் தூண்டும் உள்ளடக்கங்கள், வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் வெறுப்பைப் பரப்பும் பதிவுகள், அனுமதியின்றி பகிரப்படும் அந்தரங்கப் படங்கள் உள்ளிட்ட ஏழு வகையான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.

மேலும், இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணையம் என்ற புதிய ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்தை நிறுவுவதற்கு சுமார் 18 மாதங்கள் வரை ஆகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாட்டில் வயது சரிபார்ப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டில் வயது வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதேவேளை பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களை வழங்கும் தளங்களுக்கு எந்தவித விலக்கும் வழங்கப்படாது என்றும் கனடா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes