General11 June 2026

நாட்டின் நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் - அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

எதிர்வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்படும் பட்சத்தில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க, இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக இருக்கக்கூடும் என தெரிவித்தார். இ

தன் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பிரதான நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயாராக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அவசர காலங்களில் குடிநீர் விநியோகத்திற்காக தேசியஅனர்த்த முகாமைத்துவ சேவை மையத்திடம் உள்ள நீர் விநியோக வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், நாங்கள் இதற்கு முன்னர் இப்படியொரு எல் நினோ நிலைமையைக் கேள்விப்பட்டதில்லை. இதற்காக நாம் பெருமளவில் தயாராக வேண்டியிருக்கும். பொதுவாக, மழைக்காலத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதற்கும் எம்மால் நீர் விநியோகம் செய்ய முடியும்.

ஆனால், இந்த எல் நினோ நிலைமை ஏற்பட்டால், பெருமளவில் நீரை விநியோகிப்பதற்கு தற்போதுள்ள நீர் விநியோக வாகனங்கள் போதுமானதாக இருக்காது. நீர்நிலைகள் முற்றாக வற்றிப்போகக்கூடும் என்பதால், நீரைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட ஆதாரங்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்" என தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பலத்த எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உலக வானிலை அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.

அத்துடன், இலங்கையின் காலநிலை அவதானிப்பு திணைக்களமும் எதிர்வரும் ஜூலை -ஓகஸ்ட் மாதங்களில் நாட்டில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் வழமைக்கு மாறாக ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக உலகளாவிய வானிலை வடிவங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு உலகளாவிய காலநிலை நிகழ்வே எல் நினோஆகும்.

இந்த எல் நினோ தாக்கத்தினால் இலங்கை, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பதிவாகும் என்பதுடன், கடுமையான வறட்சியும் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes