General11 June 2026

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை கட்டமைப்பில் உள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் உத்தியோகபூர்வ அனுமதி பெறப்படவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகள் தவிர ஏனைய தொழில் வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நியாயமான முறையில் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கும் அதேவேளை, ஏனையவை அரசியல் பின்னணியைக் கொண்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes