General13 June 2026

பயங்கரவாதத் தடைச் சட்டம்: 'நிரபராதிகளின் ஆயுட்காலம் சிறையிலேயே முடிகிறது' என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சாடல்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சட்டத்தினால் நிரபராதிகளின் ஆயுட்காலமும் கூட சிறையிலேயே முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கான விசாரணைக் காலம், சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் காலம் மற்றும் நீதிமன்ற விசாரணை முடிவடையும் காலம் ஆகியவற்றிற்கு எந்தவொரு சட்டபூர்வ காலவரையறையும் இல்லை.

பாதுகாப்பு அமைச்சரின் (ஜனாதிபதி) அனுமதியுடன், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையில் ஒருவரை 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். இதனை நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்த முடியாது.

இந்தச் சட்ட வழக்குகளில் 95 சதவீதமானவை சித்திரவதைகள் மூலம் பெறப்படும் 'சுய ஒப்புதல் வாக்குமூலங்களை' அடிப்படையாகக் கொண்டவை. இதனைத் தடுக்க, கைது செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுக்களைத் தாக்கல் செய்து தாம் பல வழக்குகளை விரைவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இளைஞர்கள் மட்டுமன்றி ஊடகவியலாளர்கள், வங்கி முகாமையாளர்கள் எனப் பலரும் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டனர்.

தாம் வாதாடிய வழக்குகளில் பலர் 15 முதல் 18 ஆண்டுகள் வரை சிறையிலிருந்துவிட்டு இறுதியில் 'நிரபராதிகள்' என விடுதலையாகியுள்ளனர். 22 வருடங்களாக இன்னும் சிறையில் இருக்கும் கைதிகளும் உள்ளனர்.

இறுதியில் அவர்கள் விடுதலையானாலும், ஒரு நிரபராதியின் ஒட்டுமொத்த ஆயுட்காலமும் சிறையிலேயே வீணடிக்கப்பட்டு விடுகிறது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes