International16 June 2026

உலக அளவில் 1.8 பில்லியன் சிறுவர்கள் வறட்சியினால் ஆபத்தில் : யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை!

உலகில் உள்ள ஒட்டுமொத்த சிறுவர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ளதுடன், வறட்சியின் காரணமாக மாத்திரம் சுமார் 1.8 பில்லியன் சிறுவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

மேலும், 1.2 பில்லியன் சிறுவர்கள் அதீத வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரம் அடைந்து வரும் காலநிலை மாற்ற அபாயங்களினால் சிறுவர்களே "மிகக் கடுமையான பாதிப்புகளை" எதிர்கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ள யுனிசெப் அமைப்பு, சிறுவர்கள் மீதான இந்த பாதிப்புகளைக் குறைப்பதற்காக உட்கட்டமைப்பு, காலநிலை தழுவல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திறன்களில் அரசாங்கங்கள் அவசரமாக முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

யுனிசெப் அமைப்பின் புள்ளிவிபர முகாமையாளரும், இந்த அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவருமான ரோகிணி சம்பூர்ணம் சுவாமிநாதன் இது குறித்துக் கூறுகையில்,

"சிறுவர்கள் வெள்ளம், வறட்சி அல்லது வெப்ப அலை போன்ற ஏதேனும் ஒரு தனித்தனி ஆபத்துகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை. மாறாக அவர்கள் பலதரப்பட்ட ஆபத்துகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் சுமார் 1.1 பில்லியன் சிறுவர்கள் ஒரே நேரத்தில் குறைந்தது மூன்று காலநிலை அபாயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய தொடர்ச்சியான மற்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த ஆபத்துகள் அரசாங்கங்களையும் சமூக சேவைகளையும் முடக்கிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையானது வான் மாசுபாடு, மலேரியா போன்ற நோய்த்தாக்கங்கள், அத்துடன் உலகளவில் சுகாதார வசதிகள் மற்றும் குடிநீர் கிடைப்பதற்கான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 662 மில்லியன் சிறுவர்கள் வெப்பமண்டல சூறாவளிகளாலும், 337 மில்லியன் சிறுவர்கள் நதி வெள்ளங்களாலும், 33 மில்லியன் சிறுவர்கள் கடலோர வெள்ளங்களாலும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தை மையமாகக் கொண்டு சுமார் 1 பில்லியன் சிறுவர்கள் மலேரியா நோய் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 85 நாடுகளில் உள்ள 242 மில்லியன் சிறுவர்களின் பாடசாலைக் கல்வி காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக சோமாலியா, மடகாஸ்கர், மியான்மர், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை யுனிசெப் அடையாளம் கண்டுள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்படும் அதிகளவான சிறுவர்கள் பங்களாதேஷ், இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் தான்சானியா போன்ற விவசாயத்தை நம்பியிருக்கும் பொருளாதார நாடுகளிலேயே வாழ்கின்றனர்.

அதேநேரம், கடலோரப் பகுதிகள் இல்லாத நிலப்பரப்பு நாடுகளும் வறட்சி, பாலைவனமாதல் மற்றும் திடீர் வெள்ளம் போன்ற கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளதுடன், போட்ஸ்வானா மற்றும் புர்கினோ பாசோ போன்ற நாடுகளில் நீர் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என யுனிசெப் எச்சரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes