General16 June 2026

126 பாடசாலை விடுதிகளை நவீனமயமாக்க 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

இலங்கையில் உள்ள பாடசாலை விடுதிகளில் பழுதடைந்த நிலையில் காணப்படும் 126 விடுதிக் கட்டிடங்களை நவீனமயமாக்குவதற்கான விசேட கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எமது நாட்டுப் பாடசாலை விடுதிகளில் நிலவும் பின்வரும் குறைபாடுகள் காரணமாக, அங்கு தங்கியுள்ள மாணவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் கல்விச் செயலாற்றுகைகளுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

126 விடுதிக் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலைமையில் காணப்படல்.

அவற்றின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படல்.

பௌதீக மற்றும் சுகாதாரநல வசதிகள் பற்றாக்குறையாக இருத்தல்.

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்மை.

இதன் காரணமாக, இந்த விடுதிகளுக்குத் தேவையான வசதிகளை அவசரமாக நவீனமயப்படுத்தி, மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்குப் பொருத்தமான ஒரு தரப்பண்பான சூழலை உருவாக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்திட்டமானது 2026 – 2028 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் அமுல்படுத்தி முடிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக பாடசாலை விடுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கான பாதுகாப்பான மற்றும் சுகாதாரமிக்க தங்குமிட சூழல் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes