General19 June 2026

நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினர் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு கள விஜயம்!

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியை பார்வையிட நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, நீதியமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று (19) மாலை சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு தொடர்பில் பார்வையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இன்று சித்துப்பாத்தி மனித புதைகுழி அமைந்துள்ள பகுதிக்கு கள விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளானது, குற்றவியல் வழக்கு விசாரணையின் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்படுவதால், நீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்படுவோரை தவிர ஏனையவர்களுக்கு செல்ல முடியாது.

அதற்கமையவே, நீதிமன்றத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான், குறித்தக் குழுவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 29 நாளுக்கான அகழ்வுப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதுவரையான அகழ்வுப் பணிகளின் போது 387 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவற்றிலிருந்து 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.



Related recommendation
Hiru TV News | Programmes