General19 June 2026

சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த குற்றப்பத்திரிகையில் சஷீந்திர ராஜபக்ஷவுடன் இணைந்து சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொட்டகம ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், சாட்சியாளர்களாக 30 பேரும், வழக்கு சான்றுப் பொருட்களாக 38 ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது, செவனகல - கிரி இப்பன்பெவ பகுதியில் உள்ள மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது.

இதற்காக, 8.85 மில்லியன் ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இழப்பீட்டு அலுவலகத்துடன் தொடர்புடைய அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக சந்தேகநபர்கள் தங்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தச் செயற்பாடானது ஊழல் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமைக்குச் சமம் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes