General19 June 2026

பசிலுக்கான பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதம நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக காவல்துறை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கடந்த மே மாதம் 22 ஆம் திகதி பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த தினத்தில் பசில் ராஜபக்ஷ சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, முன்னாள் அமைச்சர் உடல்நலக் குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதால் அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்துத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், சந்தேகநபரின் ஆரோக்கிய நிலையைக் கருத்திற்கொண்டு பிடியாணையை மீளப் பெறுமாறு கோரி சட்டத்தரணிகளால் இன்றைய தினம் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், பசில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருவதாகவும், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் அவ்வாறு பிடியாணையை மீளப் பெற முடியாது என்றும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த மாத்தறை பிரதம நீதவான், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அவ்வாறே நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes