General20 June 2026

எரிபொருள் QR முறையை நீக்குவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை; உலக சந்தையில் மீண்டும் விலை உயர்வு!

எரிபொருள் விநியோகத்திற்காக தற்பொழுது நடைமுறையிலுள்ள QR குறியீட்டு முறைய (QR Code) முழுமையாக நீக்குவது தொடர்பாக அரசாங்கமோ அல்லது கூட்டுத்தாபனமோ இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகளோ அல்லது கலந்துரையாடல்களோ இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த மசகு எண்ணெய் விலைகள், நேற்றைய தினம் மீண்டும் சற்றே அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, உலக சந்தையில் ஒரு பீப்பாய் டீசலின் விலை 1.06 டொலராலும், 92 ரக பெற்றோல் பீப்பாய் ஒன்றின் விலை 2.58 டொலராலும் நேற்றைய தினம் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தற்போதைய விலை நிலவரம் ஸ்திரமாக நீடிக்கும் பட்சத்தில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நட்டமும் ஏற்படாது என்பதால், உள்நாட்டில் தற்போதைய விலையிலேயே தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியும் என நிர்வாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரும் நாட்களில் உலக சந்தையில் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்தால், அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தத்தின் போது உள்நாட்டிலும் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், கூட்டுத்தாபனம் உலக சந்தை நிலவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes