அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக உடன்படிக்கையின் ஒரு அங்கமாக லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானில் மோதல்கள் நிறுத்தப்படுவது, ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அமெரிக்கா - ஈரான் இடையே 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்கான முதன்மை நிபந்தனையாகும்.
அமெரிக்க நேரப்படி, வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக அமெரிக்க மற்றும் ஹிஸ்புல்லா தரப்புகள் உறுதிப்படுத்தியிருந்தன.
எனினும், போர்நிறுத்தம் அமுலாகிய இரவோடு இரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்கள் படைகள் மீது 50 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாகவே ஹிஸ்புல்லாவின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானில் பொதுமக்கள் எவரையும் காயப்படுத்துவது தங்கள் நோக்கமல்ல என்றும், எல்லையோர அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காகவே லெபனான் நிலப்பரப்பின் 5% பகுதியை இஸ்ரேல் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், லெபனான் மண்ணில் இஸ்ரேல் படைகள் சுதந்திரமாக நடமாடுவதையோ அல்லது மார்ச் 2 ஆம் திகதிக்கு முந்தைய நிலவரத்துக்கு நாடு திரும்புவதையோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் லெபனானின் தெற்குப் பகுதி மற்றும் பெக்கா பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் நடத்திய இந்தத் தாக்குதல்களில், டயர் (Tyre) மாவட்டத்தின் பாரிஷ் (Barish) நகரில் உள்ள மூன்று அடுக்கு குடியிருப்பு கட்டடம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கஃபர்ருமான் - நபடியே (Kfarrumman-Nabatieh) வீதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனான் இராணுவ சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை மருத்துவப் பணியாளர்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 3,912 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, லெபனானில் மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட 14 அம்ச தற்காலிக உடன்படிக்கையை நிரந்தர ஒப்பந்தமாக மாற்றுவதற்கான அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி தொடங்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் பேசும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரகச்சியைச் சந்திக்கத் தெஹ்ரான் சென்றுள்ளார்.
எனினும், பதற்றமான சூழல் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்தில் நடத்தவிருந்த பேச்சுவார்த்தைக்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய அதிகாரிகளைச் சந்திப்பார்களா என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை.
Latest News
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்