General20 June 2026

சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை

வீதி பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 33 க்கும் மேற்பட்ட உந்துருளிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றினை செலுத்திய சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நகரப்பகுதி உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (20) சனிக்கிழமை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, உந்துருளி ஆவணங்கள் மற்றும் காப்புறுதி (Insurance) இன்றி பயணித்தமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாது சென்றமை, ஒரு உந்துருளியில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தமை, அதிவேகமாகச் சென்றமை மற்றும் அதிக ஒலி எழுப்பும் வகையில் சைலன்சர்களைப் பொருத்தி உந்துருளிகளை செலுத்தியமை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, வீதி போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலரது உந்துருளிகள் மற்றும் சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது காவல்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டுதலுடன், சாய்ந்தமருது காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட உந்துருளிகளின் உரிமையாளர்களுக்கு, சாய்ந்தமருது காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியினால் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சட்ட நடவடிக்கைகாக கைப்பற்றப்பட்ட உந்துருளிகள் தற்போது தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சாய்ந்தமருது காவல்துறை நிலையத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes