General24 June 2026

பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தானசாலைகள் மற்றும் தோரணங்களை அமைப்பவர்கள், தத்தமது பிரதேச காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளை முன்கூட்டியே தெளிவுபடுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டப்ளியூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பொசன் பண்டிகை கால தானசாலைகள் தொடர்பாக பிரதி காவல்துறை மாஅதிபர் மேலும் விபரிக்கையில்,

பொதுமக்களுக்காகப் காட்சிப்படுத்தப்படும் அல்லது நடத்தப்படும் நிகழ்வுகளின் போது, வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது என்பது போன்ற அத்தியாவசிய வழிகாட்டல்களை காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் தானசாலைகளை நடத்த வேண்டாம் என்று கூறவில்லை. மாறாக, அதனை முறைப்படுத்துமாறு கோருகிறோம்.

இந்த பொசன் காலத்தில் காவல் நிலையப் பொறுப்பதிகாரிகள் நேரடியாகத் தலையிட்டு, தானசாலைகளை நெறிப்படுத்தப்பட்ட முறையில் ஒழுங்கமைக்க வேண்டும்.

வீதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்காமல் மறைக்கும் மற்றும் தங்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல்துறைமா அதிபர் எச்சரித்துள்ளார்.

எங்கள் புள்ளிவிபரங்களின்படி பதிவாகும் விபத்துகளை விட, களத்தில் அதிகளவிலான விபத்துகள் நடக்கின்றன.

சில சந்தர்ப்பங்களில் விபத்து ஏற்பட்டவுடன், காவல்துறையினருக்கு அறிவிக்காமல் வீதியிலேயே அதனை இரு தரப்பினரும் சுமுகமாகத் தீர்த்துக்கொள்கின்றனர்.

இனிமேல் ஒவ்வொரு விபத்தும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்காவிட்டால் அது குற்றமாகும்.

விபத்தை அறிக்கை செய்வது சாரதியின் பொறுப்பாகும். தவறினால், விபத்தைப் காவல்துறையினருக்கு அறிவிக்கத் தவறியமை என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்திய 7,500 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் டப்ளியூ. பி. ஜே. சேனாதீர வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் இதுவரை பாரதூரமான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 98 ஆலும், விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆலும் அதிகரித்துள்ளது.

எனினும், வாராந்த அடிப்படையில் பார்க்கும்போது தற்போது விபத்துகள் குறைவடைந்து வருவதாகவும், விபத்துகளைத் தடுக்க விசேட காவல்துறை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes