General28 June 2026

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை மீறிய இலங்கை: சர்வதேச தலையீட்டை கூட்டாக வலியுறுத்தும் 9 அமைப்புக்கள்

இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள உறுப்பு நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளன.

இந்த அமைப்புக்கள் இலங்கையின் மீறல்களைக் கட்டுப்படுத்த குறித்த பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகிக்குமாறு சர்வதேச நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

1994-ஆம் ஆண்டு முதல் இலங்கையானது சித்திரவதைகளுக்கு எதிரான இந்த உடன்படிக்கையில் இணைந்துள்ளது. எனினும், 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்களை இலக்கு வைத்து பலவந்தமாகக் கைதுசெய்தல், தடுத்துவைத்தல் மற்றும் வலிந்து காணாமலாக்குதல் போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக இந்த கூட்டறிக்கை குற்றம் சாட்டுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதைத் தடுத்தமை சித்திரவதைகளுக்குச் சமமான செயல் என ஐக்கிய நாடுகள் விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், 2016 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையும், 2024 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையும் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் போர்க்காலக் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதால், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதி கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கை 'ரோம் சாசனத்தில்' கையெழுத்திடாத காரணத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரே தீர்வு என அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்தக் கூட்டறிக்கையை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான பேரவை (FORUM-ASIA), அவுஸ்திரேலிய சர்வதேச நீதி மையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய மையம், நியூ லைன்ஸ் நிறுவனம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு (PEARL), சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய வழக்குத் தொடரும் திட்டம் (Strategic Litigation Project) ஆகிய அமைப்புகள் உள்ளடங்குகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes