General29 June 2026

வெனிசுவேலாவில் 106 மணிநேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு!

வெனிசுவேலாவின் லாகாயிரா (La Guaira) மாநிலத்தில், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் 106 மணிநேரம் சிக்கியிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

ஆரோன் லெவி கேன்டிலோ வர்காஸ் (Aaron Levi Cantillo Vargas) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இளைஞர், காரபல்லேடா (Caraballeda) நகரில் வைத்து மீட்கப்பட்டுள்ளதாக எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கலே தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலா, மெக்சிகோ மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இணைந்து இந்தச் சவாலான மீட்புப் பணியை முன்னெடுத்தனர். இந்த இளைஞரை மீட்பதற்கான முயற்சியில் மிகப்பெரிய சிக்கல் இருந்ததாக ஜனாதிபதி நயீப் புக்கலே குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளைஞருக்கும், அவரை மீட்கச் சென்ற குழுவினருக்கும் இடையில் உயிரிழந்த ஒருவரது உடல் இருந்ததால், மீட்புப் பணிகள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டன.

இளைஞரை மீற்பதற்காக மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாக 43 மணிநேரம் கடுமையாகப் போராடியதாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட ஆரோன் லெவிக்கு தற்போது விசேட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி நயீப் புக்கலே, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் பலரை உயிருடன் மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மீட்புக் குழுவினர் தமது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes