General03 July 2026

வவுனியா மாநகர சபையிலிருந்து மாயமான செங்கோல் : காவல்துறையால் கண்டுபிடிப்பு

வவுனியா மாநகர சபையில் இருந்து காணமால் போனதாக கூறப்படும் செங்கோல், காவல்துறையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உள்ள தளவாட தயாரிப்பு நிலையத்தில் இருந்து செங்கோல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மீட்கப்பட்ட செங்கோல் வவுனியா நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாநகர சபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டதாக, வவுனியா காவல்நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

எனினும், மாநாகர சபையிலிருந்த செங்கோல், தளவாட தயாரிப்பு நிலையத்திற்கு யாரால் கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் காவல்துறையினரிடம் எமது செய்திப் பிரிவு வினவியது.

அதற்கு பதில் வழங்கிய, வவுனியா காவல்நிலைய பொறுப்பதிகாரி, செங்கோலின் திருத்தப் பணிகளுக்கான குறித்த தளவாட நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவே கூறப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

முன்னதாக, மாநகர சபையின் பொறுப்பிலிருந்த செங்கோல், அடையாள சின்னம் மற்றும் மாநாக முதல்வருக்கான ஆடை என்பன காணாமல் போயுள்ளதாக, சபையின் செயலாளரால் காவல்நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைபாட்டுக்கு அமைய, மாநாகர சபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes