General03 July 2026

இலங்கை - பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம்! வானூர்தி, துறைமுக ஒத்துழைப்பு விரிவாக்கம்

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான வானூர்தி மற்றும் துறைமுகத் துறை ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், சிவில் வானூர்தி சேவைகள் மற்றும் வானூர்தி நிலையங்கள் அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வானூர்தி சேவைத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை அதிகரித்தல், வானூர்தி பயணங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் இந்த துறையின் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், துறைமுக மற்றும் கடல்சார் துறைகளில் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

கொவிட் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் இலங்கை வலுவாக மீண்டெழுந்து முன்னெடுத்து வரும் அபிவிருத்திப் பயணத்தை பாகிஸ்தான் தூதுக்குழுவினர் இதன்போது பாராட்டினர்.

இலங்கையை பிராந்திய ரீதியில் மேலும் வலுப்படுத்துவதற்காக, துறைமுக மற்றும் சிவில் வானூர்தி சேவைத் துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
Related recommendation
Hiru TV News | Programmes