General04 July 2026

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையேயான சந்திப்பு ஒன்று இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தசந்திப்பின் போது, கடந்த வருடம் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் நடைபெற்ற சந்திப்பின் பின்னர், கோரிக்கைகளின் அடிப்படையில் அவர் பெப்ரவரி 11 ஆம் திகதி அன்று இந்தியப் பிரதமருக்கு ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக எழுதிய கடிதம் நினைவூட்டப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடுகளைத் தொடர்ந்து உறுதியுடன் வலியுறுத்துவதுடன், இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய மத்திய அரசுக்கு தேவையான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, தமிழர்களின் தேசம், தனித்துவமான மக்கள் என்ற அங்கீகாரமும், அவர்களின் சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில், கூட்டாட்சிக் கட்டமைப்பிலான (சமஷ்டி) அரசியல் தீர்வை ஏற்படுத்த இந்தியா உறுதியான அரசியல் முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், கனகரத்தினம் சுகாஷ், பொ.ஐங்கரநேசன், கே.வி.தவராசா, காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes