General06 July 2026

வேலை கேட்டுச் செல்லும் பட்டதாரிகளை அடித்து விரட்டுகிறது அரசாங்கம்– நாமல்

பொதுமக்களுக்கு அசாத்தியமான எதிர்பார்ப்புகளையும், பொய் வாக்குறுதிகளையும் வழங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம், நாட்டின் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை முற்றாக நாசமாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

"தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் தற்கால இளைஞர் தலைமுறைக்கு புதியதொரு நம்பிக்கையைத் தருவதாகக் கூறியது.

நவீன உலகிற்கு ஏற்றவாறு நாட்டை மாற்றுவதாகவும், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும், விவசாயிகளையும், கடற்றொழிலாளர்களையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பதாகவும் கூறி, மக்களை ஏமாற்றியே ஆட்சிக்கு வந்தது.

ஆனால், இன்று இந்த அரசாங்கம் நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் முற்றாகத் தகர்த்தெறிந்துள்ளது.

இன்று தங்களுக்குரிய வேலைவாய்ப்புகளைக் கேட்டுச் செல்லும் பட்டதாரிகள் வீதிகளில் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.

அரச பணியாளர்களின் முதுகெலும்பை உடைத்து, அரச சேவைக்கு இருந்த கௌரவத்தையும் இந்த அரசாங்கம் இல்லாது ஒழித்துள்ளது.

மக்கள் எதிர்பார்த்த நவீனத்துவத்துக்குப் பதிலாக இன்று நாட்டில் வெறுப்புணர்வும், பொறாமையும், பழிவாங்கல்களுமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்ததாக, காலநிலை மாற்றங்களினால் உலகமே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறைக்குத் தயாராகி வருகின்றது.

ஆனால், எமது அரசாங்கம் அதற்கு என்ன செய்யப்போகின்றது என்று தெரியவில்லை.

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்கவே அவர்கள் திட்டமிடுகிறார்கள்.

மறுபுறம் உள்நாட்டு விவசாயிக்கு உரிய நேரத்தில் உரம் கிடைப்பதில்லை, நெல்லுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அநீதியான வரி விதிப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் வாழும் எமது தொழிலாளர்கள் மத்திய கிழக்கிலும், இஸ்ரேலிலும் போர்ச் சூழலுக்கு மத்தியில், வாழ்வா சாவா என்ற போராட்டத்துக்கு மத்தியில் உழைத்து நாட்டிற்கு அனுப்பும் டொலர்களுக்கும் இந்த அரசாங்கம் வரி விதிக்கின்றது.

இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் மீதும், கடந்த அரசாங்கத்தின் மீதும் பழியைப் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றது.

அரசாங்கத்துக்குத் தெரிந்ததெல்லாம் மக்களை ஒடுக்குவதும், சிறையிலடைப்பதும், பொய்ச் சாட்சிகளை உருவாக்குவதும் மாத்திரமே" என நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes