General07 July 2026

பேருந்துச் சேவைகளை மேம்படுத்த 'கொத்தணி முறைமை' அறிமுகம்: அமைச்சரவை அனுமதி

இலங்கையின் பயணிகள் பேருந்துச் சேவையில் நிலவும் போட்டித்தன்மை மற்றும் ஒழுங்கீனங்களுக்குத் தீர்வாக, 'பேருந்துச் சேவைக் கொத்தணி' (Bus Sector Clustering) முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் தெரிவித்துள்ளது.

எமது நாட்டின் முக்கிய போக்குவரத்து ஊடகமாக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேரூந்துகள் விளங்குகின்ற போதிலும், நீண்டகாலமாக நிலவி வரும் தற்போதைய நடைமுறையால் அதிக போட்டித்தன்மை, நேர அட்டவணையைப் பேணாமை, வீதிகளில் அதிக பேரூந்துகள் இயங்குவதால் ஏற்படும் நெரிசல், பாதுகாப்பற்ற ஓட்ட முறைகள், பயணிகளின் அசௌகரியங்கள் மற்றும் வளங்கள் வீணடிப்பு போன்ற பல பிரச்சினைகள் மேலெழுந்துள்ளன.

இவற்றுக்கு வெற்றிகரமான தீர்வாக, உலக நாடுகள் பலவற்றில் நடைமுறையிலுள்ள 'கொத்தணி முறைமை' அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த முறைமையின் கீழ், ஒரே போக்குவரத்து வழித்தடத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலோ இயங்கும் பேருந்துச் சேவைகள் தனித்தனி அலகுகளாக அல்லாமல், ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் ஒரே சேவைக் கொத்தணியாக இயக்கப்படும்.

இதன் மூலம் தற்போதைய இயக்க மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளைக் குறைத்து, பயனுள்ள பயணிகள் சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக 170, 177 மற்றும் 190 ஆகிய பேருந்து வழித்தடங்களில் இந்த முன்னோடி வேலைத்திட்டத்தை உரிய பங்காளர்களின் பங்களிப்புடன் அமுல்படுத்துவதற்கும், அதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் அமைச்சரவை தனது உடன்பாட்டை வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes