General09 July 2026

அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகருக்கு கஜேந்திரகுமார் கடிதம்

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகருக்கு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

நாடாளுமன்றத்தில் எனக்கு இடதுபுறம் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பொதுவெளியிலும் தன்னைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதோடு, வன்முறை அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகிறார். இத்தகைய இழிவான சொற்களின் பயன்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்தச் சூழல் எனது கவனத்தைச் சிதறடிப்பதால், அவரை நாடாளுமன்ற அவையில் எனக்கு அருகில் அமர வைப்பது இயலாத காரியமாகிவிட்டது

அத்துடன், சுயேச்சைக் குழு ஒன்றின் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார். வழக்கமாக இத்தகைய உறுப்பினர்களுக்கான இருக்கைகள், மூத்த தலைவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டதன் பின்னரே வழங்கப்படுவது வழக்கம்.

இருப்பினும், இந்த வழக்கமான நடைமுறைக்கு மாறாக, அவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் இடையில் அமர அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் தாங்கள் தலையிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குப் பின்னர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களை அமர வைக்கும் நாடாளுமன்ற மரபுக்கு இணங்க, குறித்த உறுப்பினரின் இருக்கையை எனக்கு அருகில் இல்லாதவாறு மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்," என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes