General09 July 2026

எல் நினோ காலநிலை தாக்கம் - நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நீர் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும், உரிய பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழமையாகவே உலர்ந்த காலநிலை நிலவுவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வருடம் வறட்சி நிலை தீவிரமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இதேவேளை செப்டெம்பர் மாத மத்திய பகுதியில் வடகீழ் பருவமழை ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த மாதத்தில் மழைவீழ்ச்சி வழமையை விடக் குறைவாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.


இந்த காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் மின்சாரத் சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அனைத்து நிறுவனங்களும் தமது பதிலளிப்புத் திட்டங்களைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த திட்டங்கள் எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மீண்டும் மீளாய்வு செய்யப்படவுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes