General26 July 2026

இலக்கை விட இணைப்பாட்டமே முக்கியம்: இஷான் கிஷன்!

ஸிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது இருபதுக்கு 20 போட்டியில் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்ததால், 250 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு இணைப்பாட்டம் அமைப்பதிலேயே கவனம் செலுத்தியதாக இந்திய வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.

3ஆவது வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் திலக் வர்மா 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைக் குவிக்க, இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது.

220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில், 3ஆவது இடத்தில் களமிறங்கும்போது வெளிப்புறப் பேச்சுகளைப் பற்றி யோசிக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே முக்கியம் என இஷான் கிஷன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான போட்டிகளால் வீரர்கள் சோர்வடைந்தாலும், போதிய ஓய்வு மற்றும் உணவோடு அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes