General29 July 2026

தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்

திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞரொருவரே இந்த நற்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த குறித்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

விசாரணையில், கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் குறித்த மாணவியின் தந்தையிடம் அதனை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளார்.

மத நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes