General30 July 2026

இலங்கையின் கடன் தரவரிசையில் முன்னேற்றம்: பிரதி அமைச்சர் தெரிவிப்பு!

ஸ்டேண்டர்ட் எண்ட் பூவர்ஸ் (S&P) சர்வதேச தரநிர்ணய நிறுவனம் வெளியிட்ட புதிய மதிப்பீட்டின்படி, இலங்கையின் கடன் மதிப்பீட்டை அரசாங்கம் ஸ்திரமான மட்டத்திலேயே பேணி வெற்றி கண்டுள்ளதாகத் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டிட்வா சூறாவளித் தாக்கம் மற்றும் மத்திய கிழக்குப் போர்ச் சூழல் போன்ற வெளிப்புறச் சவால்களுக்கு மத்தியிலும், சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்ததால் இந்த நிலை சாத்தியமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அளவிடும் 'பரிமாற்றம் மற்றும் மாற்றத்தக்க தன்மை' (T&C) மதிப்பீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் மிக ஆபத்தான 'CCC' மட்டத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 'CCC+' ஆக உயர்ந்து, 2026 ஆம் ஆண்டு தற்போது 'B-' நிலைக்கு முன்னேறியுள்ளது.

இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தாமலும், பொருளாதாரத்தைச் சுருக்காமலும் மத்திய வங்கியின் மூலோபாயத் தலையீடுகள் மூலமே வெளிநாட்டுக் கையிருப்பு உயர்த்தப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், கடன் வெளிப்படைத்தன்மையில் இலங்கை சர்வதேச அளவில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும், ஜூலை மாதத்துக்குள் ஆண்டின் எதிர்பார்க்கப்பட்ட வருமான இலக்கில் 63.5 சதவீதத்தை அரசாங்கம் எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் எனப் பரப்பப்பட்ட வதந்திகள் பொய்யானவை என்பதை இந்த மதிப்பீடு நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த அவர், சரியான கொள்கை முடிவுகள் மற்றும் நிதி ஒழுக்கம் மூலம் எதிர்காலப் பொருளாதாரச் சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes