General04 August 2026

காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போதைய காவல்துறை மா அதிபர் அரசாங்கத்திற்கு சேவையாற்றுவதை விடுத்து, அரசுக்கும் மக்களுக்குமே சேவையாற்ற வேண்டும் என ஊடக சந்திப்பொன்றில் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

மேலும், 37வது காவல்துறைத் தலைவர் "தெருவில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த காவல்துறைத் தலைவர் என்ற பெயரில் வரலாற்றில் இடம்பிடிப்பதை" தாம் விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த கூற்று தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்தக் கருத்துக்களை அரசாங்கம் இலகுவாக எடுத்துக்கொள்ளாது என்றும், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய கருத்துக்கள், கடந்த காலத்தில் அரசியல் அதிகாரத்திற்காக மக்களைப் பலிகொடுத்த ஒரு அரசியல் இயக்கத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனைப் பொறுப்பற்ற செயல் என்றும் விமர்சித்தார்.

தற்போதைய காவல்துறை மா அதிபர் தனது கடமைகளைத் திறம்படச் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஊழல், கையூட்டல் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்வதால் பயமடைந்தவர்களாலேயே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாகஅமைச்சர் தெரிவித்தார்.

விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes