General04 August 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் யோசனை நிறைவேற்றப்பட்டால், நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து, நாடு படிப்படியாகச் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்து இருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஹிரு டி.வியி ஒளிபரப்பான சலகுண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

ஒரு தனிநபரை இலக்காகக் கொண்டு அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், நீதித்துறையின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகளையே மீண்டும் வேறு வடிவத்தில் செய்ய முற்படுவது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்ற சுதந்திரத்தைக் குறைப்பதற்கோ அல்லது பறிப்பதற்கோ எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில், இந்த யோசனை கட்டாயமாகப் பொதுஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த யோசனை பொருத்தமற்றது என முப்பீட மகாநாயக்க தேரர்களும், அங்லிகன் திருச்சபையும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்குகளை விரைவுபடுத்துவதே நோக்கம் என அரசாங்கம் கூறினாலும், இந்த அவசரத் திருத்தத்தின் பின்னணியில் ஏதோ ஒரு மறைமுக உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிமன்ற முறைமை மீதான மக்களின் நம்பிக்கை உடைந்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்.

இறுதியில் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்வதற்கான இயலுமை இல்லாமலும் இல்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes