General04 August 2026

காத்தான்குடி பள்ளிவாசல் பேரவலம்: மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

காத்தான்குடி பள்ளிவாசல் சம்பவம் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத மனிதாபிமானப் பேரவலமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி ஹுசைனியா ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற 36ஆவது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததோடு, பலர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அதன் வலியோடு வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அவர்கள் சிந்திய இரத்தம்தான் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக மண்ணில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பாரிய இழப்புகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது எனவும், அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு உள்ளதாகவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட ஹுசைனியா பள்ளிவாசல் உள்ளிட்ட மத மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பிலும், மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் மதிக்கப்பட வேண்டும்." என அவர் கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes