General05 August 2026

அதிவேகப் பாதைகளில் பயணிப்போருக்கு ஆசனப்பட்டி கட்டாயம்: உற்பத்தியாளர்களுக்கான கால அவகாசம் நீடிப்பு

தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை அடுத்து, அதிவேகப் பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் கீழ், அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்துப் பொருத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகைக் காலம் கடந்த ஜூன் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் 17 ஆம் திகதியிட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் இக்கட்டளையில் திருத்தம் செய்து, சலுகைக் காலத்தை எதிர்வரும் செப்டம்பர் 19 வரை நீடித்தது.

நாடாளுமன்ற ஒப்புதலுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes