General07 August 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனு ஒன்றில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளான மரண தண்டனை கைதிகள்!

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவரால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட குடியியல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிரதிவாதிகளாகப் பெயரிடுவதை நீக்குவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஷாங்க்ரி-லா விருந்தகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தனக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், நிரந்தர ஊனமுறுதல் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றிற்காக 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி, சட்டத்தரணி மோதித்த டி.பி. ஏகநாயக்க என்பவரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் உட்பட 12 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்டது.

தாக்குதல்களைத் தடுப்பதற்கு பிரதிவாதிகள் உரிய கவனத்துடனும் பொறுப்புடனும் செயற்படத் தவறிவிட்டதாகக் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கில் 3ஆவது மற்றும் 4ஆவது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக வழக்கை தொடர விரும்புவதில்லை என மனுதாரரான ஏகநாயக்க நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இருவருக்கும் ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அவர் இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டினார்.

ஏனைய பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விண்ணப்பத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து, குறித்த இரண்டு பிரதிவாதிகளையும் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் மனுதாரரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னரொரு சந்தர்ப்பத்தில் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி புலஸ்தி ரூபசிங்க, தனது கட்சிக்காரருக்கு எதிராக இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான தகுதி குறித்து சவால் விடுக்க உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை அக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மாவட்ட நீதிமன்றம், அன்றைய தினத்திற்குள் இந்த ஆட்சேபனை தொடர்பில் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு ஏனைய பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes