General07 August 2026

மெகசின் சிறைச்சாலையின் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளது!

பொரளை மெகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை அடுத்து, சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலையின் 'ஈ' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று, இரவு 10:20 மணியளவில் திடீரென அந்தப்பிரவில் இருந்து வெளியேறி, கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தப் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த மோதலுக்கும் பதற்ற நிலைமைக்கும் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூழ்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இலங்கை காவல்துறை, காவல்துறையின் கலவரக் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியன உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தற்போது பதற்ற நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் இயல்பு நிலையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes