International08 August 2026

ஸ்பெயின் - இத்தாலி இடையே எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரமடைகின்றன

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் - இத்தாலி ஆகிய இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ளன.

இதனையடுத்து, இத்தாலியிலிருந்து வரும் அனைத்து வான் மற்றும் கடல்வழிப் பயணங்களுக்கும் ஸ்பெயின் எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது.

முன்னதாக, ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செவுட்டா நிலப்பரப்பிற்குள் மொரோக்கோவிலிருந்து சுமார் 78,000 ஏதிலிகள் நுழைந்ததைத் தொடர்ந்து, இத்தாலி இந்தக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.

இதனையடுத்து, ஸ்பெயினும் இ;த்தாலிக்கு எதிரான தமது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இத்தாலி, ஸ்பெயினுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

எனினும் செவுட்டாவிற்குள் நுழைந்த ஏதிலிகள் எவரும் இத்தாலிக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே எல்லைகளற்ற 'ஷெங்கன்' ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இத்தாலிய அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

ஆனால், செவுட்டாவிற்குள் நுழைந்த ஏதிலிகள்; ஷெங்கன் பகுதிக்குள் நுழைய வழியே இல்லை என்பதால், எந்தவித ஆதாரமும் இல்லாத "போலியான வாதங்களின்" அடிப்படையில் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஸ்பெயின் அரசு இதனை நிராகரித்துள்ளது.

இதற்கிடையில் செவுட்டா அல்லது மெலிலாவை அடைய முயலும் போது கடலில் வைத்துத் தடுத்து நிறுத்தப்படும் மொரோக்கோ ஏதிலிகளை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகே இந்த ஊடுருவல்கள் அதிகரித்தன.

இந்தநிலையில் இந்த நெருக்கடிக்கு நீதிமன்றமே காரணம் என்று மொரோக்கோ குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் நீந்தி செவுட்டாவிற்குச் சென்றபோது, மொரோக்கோவின் எல்லைப் பாதுகாப்பாளர்களால் ஏன் அவர்களைத் தடுக்க முயலவில்லை என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஸ்பெயினின் ஆளுகைக்குட்பட்ட செவுட்டா அல்லது மெலிலா என்ற இரண்டு நிலப்பரப்புகளின் இறையாண்மையை மொரோக்கோ அங்கீகரிக்காமை காரணமாகவே, ஸ்பெயினுக்கும் மொரோக்கோவுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர மோதல் நிலவி வருகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes